கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் தொழிற்சங்கங்களின் செயற்பாடு கவலைக்குரியதாகும்.

அச்சிடுக
சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்குமாறு கோரி வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தும் தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாத நோக்கங்களை நாட்டு மக்கள் மற்றும் கல்வி கட்டமைப்பில் சேவை புரிவோர் புரிந்துக்கொள்ள வேண்டும். 
 
ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு இருப்பதாக 1997 ஆம் ஆண்டு பீ.சீ பெரேரா கண்டறிந்ததுடன் இது தொடர்பாக சம்பள ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை 22 வருடங்களாகியும் அமுல்ப்படுத்தவில்லை என்ற் தர்க்கத்தை முன்னிலைப்படுத்தியே தொழிற்சங்கங்கள் இன்றைய  வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பெற்றுள்ளனர்.
 
எனினும் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் அரச நிர்வாக சுற்றுநிருப ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக அனைத்து அரச ஊழியர்களின் சம்பள அளவுத்திட்டத்தை திருத்தி அமைத்தது.; இதன்பிரகாரம் பட்டதாரி ஆசிரியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 16,120 ரூபாவில் இருந்து 33,330 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு அப்பால் அதிர்பர்களின் சம்பளமும் இதற்கு சமாந்தரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிபர்களின் 750 ரூபா கொடுப்பனவை 6000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் பேரில்; கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
நீண்டகாலமாக நிலைக்கொண்டுள்ள சம்பள முரண்பாட்டு பிரச்சினைகளை ஒன்றின் ஒன்றாக இனங்கண்டு அதற்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வரும் போது ,தொழிற்சங்கங்கள் இதனை தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியென காண்பித்து தமது சங்கங்களில் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் முயற்சியாகவே இனங்காண முடிகின்றது.
 
அத்துடன் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வி அமைச்சினால் விசேட யோசனைகளை அரச துறை சம்பள கலந்தாய்வு ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளதுடன் அதற்கான பரிந்துரைகளை ஆணைக்குழு அரசாங்கத்துக்கு வழங்கிய கையோடு சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வினை கல்வி அமைச்சு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும்.
 
இந்நிலையில் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே குறித்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க தலைவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படும் தொழிற்சங்கமொன்றின் தலைவருக்கு ஆசிரிய இடமாற்றல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
மேலும் கல்வி கூட்டுறவு கடன் வழங்கல் சங்கமொன்றில் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தொழிற்சங்கமொன்றின் தலைவரும் அவரது குழுவினரும் சங்கத்தின் அடுத்த தேர்தலில் ஆசிரியர்களின் ஆதரவை பெறும் நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலவச கல்வி உரிமை தொடர்பில் மார்த்தட்டிக்கொள்ளும் குறித்த தொழிற்சங்க குழுவினர் இன்றைய தினம் பாடசாலை வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அச்சுறுத்திய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதுமாத்திரமின்றி மாணவர்களை பாடசாலைக்கு இன்று வரவேண்டாம் என ஆலோசனை வழங்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த செயற்பாடுகள் தொழில் உரிமைகள் பெயரில் பாடசாலைகளில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.
 
இன்றைய தொழிற்சங்க நடவடிக்கைகளினால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் ஒரு மாணவன்; நாளொன்றுக்கான ஆறு மணிநேரம் கல்வி பயில்வதாக எடுத்துக்கொண்டால் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கைளினால் நாடுபூராகவும் உள்ள 43 இலட்சம் மாணவர்களுக்கான ; இரண்டு கோடியே 58 இலட்சம் (25,800,000) மணநேர கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சி எடுத்துள்ளமையே இன்றைய போராட்டத்தின் ஊடாக நடந்துள்ளது. இது கவலைக்குரியதாகும்.
 
எனவே மாணவர்களையும் ஆசிரியர்களையும் பகடையாக பயன்படுத்தி தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் இன்றைய வேலைநிறுத்தம் தொடர்பில் மக்களும் கல்வி கட்டமைப்பில் சேவையில் ஈடுப்படுவோரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
 
ஊடகப்பிரிவு
கல்வி அமைச்சு