கல்வி கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும்.

அச்சிடுக
-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
 
கல்வி கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும். கல்வி துறையின் அனைத்து பதவிகளும் தகைமை உடையோருக்கு வழங்குவதே எனது கொள்கையாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிரிஉல்ல ரத்னாலங்கார மஹா வித்தியாலயத்தின் ஆய்வு கூடம் மற்றும் ஆரம்ப கல்வி கற்றல் வள நிலையம் ஆகியவற்றை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
 
அதிபர்களுக்கான பயிற்சி மற்றும் தரமான அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதிபர்கள் 1000 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளோம்.
கடந்த நான்கு வருடங்களில்; தகைமையற்ற ஆசிரியர்கள் எவரையும் கல்வி கட்டமைப்பில் இணைக்கவில்லை. கல்வியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வீதத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்காக விடுதிகளுக்கான வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
 
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் தி;ட்டத்தின் கீழ் 5000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். தேசிய பாடசாலைகளுக்கு 3500 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பத்திரத்தை அமைச்சரவைக்கு முன்வைத்துளளேன்.
மேலும் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி இவ்வருடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் ஐந்தாம் தர மாணவர்களுக்கும் டெப் கணிணியை பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைமை ஏற்படும் என்றார்.