பிந்திய செய்திகள்

பிரதமரின் வழிகாட்டல் மற்றும் ஆதரவுடன் கல்விதுறையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது

 

கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம்

கடந்த ஆட்சி காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டப்பட்ட போதும் அதற்கான நிர்மாணப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கல்விக்காக வரலாற்றில் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவிலான நிதி முதலீடு செய்து பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை நாட்டின் பாடசாலை கட்டமைப்பிற்கு அர்ப்பணிப்பு செய்வதற்கு பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆதரவும் வழிகாட்டலுமே பிரதான காரணமாகும் என கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி துறையின் புரட்சிகரமான செயற்பாடுகளில் புதிய அத்தியாத்தினை ஏற்படுத்தும் வகையில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக புதிய பாடசாலை கட்டடங்கள் 500 ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (09) கஹதுடுவ ,வெனிவெல்கொல சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகத்தில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் பாடசாலை கட்டடங்கள் 500 மாணவர்களிடம் கையளித்த இன்றைய நாளில் சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகம் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
 
இங்கு கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கல்விக்காக அதிகளவிலான நிதி முதலீட்டை செய்தது தற்போதைய அரசாங்கமாகும். அதனை கட்சி பேதங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அரசாங்கம் விசேட தலையீடு செய்துள்ளதாகவும் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகம் அதன் வெற்றிகரத்தின் பிரதிபலனாகும் என்றார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் இன்று திறந்து வைக்கப்பட்ட 500 பாடசாலை கட்டடங்களுக்காக 10,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராமிய பாடசாலைகளுக்கு அனைத்து வசதிகளும் வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 9.064 பாடசாலைகளில் 18,000 அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்கான மொத்த முதலீடு 65,000 மில்லியன் ரூபாவாகும்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சார் வேலைத்திட்டங்களை இன்னும் 10 வருடங்களுக்கு முன்னெடுத்து செல்ல முடியுமாயின் நாட்டில் சிறந்த கல்வி முறைமை உருவாகும். இந்த சவாலை பொறுப்பேற்று கல்வி அபிவிருத்தியின் வளர்ச்சிக்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
அவர்கள் முன்னெடுக்கும் அர்ப்பணிப்பையும் முயற்சியையும் பாராட்டுகின்றேன். அத்துடன் பாடசாலை கட்டமைப்பை பௌதீக வளங்களினால் பூரணப்படுத்தி மனித வளங்களுடன்  அபிவிருத்தி செய்வதற்கு அதிகளவில் கவனம் செலுத்தியது தற்போதைய அரசாங்கமாகும்.

எதிர்காலத்தில் பாடசாலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே  இருக்க வேண்டும். வாகனத்தை செலுத்துவதற்கு  சாரதி அனுமதிப்பத்திரம் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.அதேபோன்று வகுப்பறையை பொறுப்பேற்கும் ஆசிரியர்கள் பயிற்சியுடன் கூடிய ஆசிரியராக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.  பயிற்சிபெற்ற ஆசிரியர்களை கட்டமைப்புக்கு இணைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.20 ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்ட கல்வி 21 நூற்றாண்டில் வாழும் மாணவர்களுக்கு பொறுந்தாது.எனவே எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் கல்வியை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

Search